சமீபத்தில் விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தது. தலைப்பு- தென்மாவட்டங்களில் மக்கள் காதல் திருமணங்களை எதிர்ப்பது ஏன்? அதன் முக்கிய அம்சமாக சமூகம் (ஜாதி) விவாதிக்கப்பட்டாலும், என்னுடைய கருத்துப்படி சமூகத்தை விட மானம் தான் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. என்னுடைய பதினெட்டு வருட தென் மாவட்ட வாழ்க்கையில் என்னுடைய அனுபவம் மற்றும் நான் நேரில் கண்ட நிகழ்வுகளை வைத்து இதை எழுதுகிறேன்.
சென்னை போன்ற மாநகரங்களில் காதல் திருமணங்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடுவதில்லை. ஆனால் இது கிராமங்களில் சாத்தியமில்லை. இதற்கு முக்கிய காரணமாக நான் கருதுவது குடும்ப அமைப்புகள் தான். கிராமங்களில் குடும்ப அமைப்பு பற்றி திரைப்படங்கள் மற்றும் புத்தகங்கள் மூலமாக அனைவரும் அறிந்த ஒன்று தான். எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும், அது சந்தோஷ நிகழ்வாகட்டும் அல்லது துக்க நிகழ்வாகட்டும், அந்த ஊரை சேர்ந்த அனைவரும் பங்கேற்றுக்கொள்வார்கள். அதாவது அந்த ஊரில் நடக்கும் நிகழ்வு அனைவருக்கும் தெரிந்தே இருக்கும். நம் நகரங்களில் அது போன்ற நிலைமை இல்லை அல்லது குறைவு என்றே சொல்ல முடியும்.
இவ்வாறு இருக்கும்போது, கிராமத்தில் ஒரு பையனோ பெண்ணோ காதலித்து அல்லது ஓடிப்போய் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்றால், அதிலும் ஒரு பெண் இதை செய்து விட்டால், பெற்றோர் தலை நிமிர்ந்து நடக்க முடியாது. என்னதான் சமாதானமோ காரணங்களோ கூறப்பட்டாலும் அத்தனை வருடங்களாக வளர்த்த பிள்ளை இன்று சொல்பேச்சு கேட்காமல் இப்படி செய்து விட்டதே என்ற கோபமும் அவமானமும் பெற்றோர்களை எவ்வளவு தூரம் கொடுமைபடுத்தும் என்பதை விவரிக்கவே முடியாது. பையன் காதல் திருமணம் செய்துகொண்டால் கூட ஏற்றுகொள்ளும் பெற்றோர் இருக்கிறார்கள். ஆனால் ஒரு பெண் என்றால் ஏற்றுகொள்பவர்கள் மிக மிக குறைவு தான்.
எவ்வளவோ பேர் என்னதான் வாதிட்டாலும், பாசத்திற்கும் மானத்திற்கும் இடையில் பெற்றோர் படும் பாடு, எவரும் அனுபவித்தால் தான் தெரியும். பெற்றோர் ஏன் இவற்றிற்காக பயப்பட வேண்டும் ? தவறான முன்னுதாரணங்கள்(examples) தான் என்பது என் கருத்து. சிறு வயதில் ஏதோ விவரம் தெரியாமல் இளைஞர்கள் செய்யும் இது போன்ற காரியங்கள் அவர்களின் வாழ்க்கையில் தீர்க்க முடியாத துன்பத்தை ஏற்படுத்தி விடுகிறது. எத்தனையோ பெண்கள் வாழ முடியாது என்று வீட்டுக்கு திரும்பி வந்திருக்கிறார்கள். அவர்களின் குழந்தைகளுக்கு திருமணம் செய்வதோ அல்லது ஒரு நல்ல நிகழ்வு நடப்பதோ கேள்விக்குறியாக அமைந்திருக்கிறது. இது போன்ற நிகழ்வுகள் தான் அனைவருக்கும் பயம் ஏற்படுத்துகிறதே தவிர, வேறு எதற்காகவும் பயப்பட தேவையில்லை என்பது என் கருத்து. ஆனால் சமூக சிந்தனை மாற்றியமைக்கப்பட வேண்டும். அப்படி அமைந்தால் தான் ஒரு சில நல்ல காதல் திருமணங்களும் ஏற்றுக்கொள்ளபடும். அதற்கு இன்னும் சில வருடங்கள் ஆகும்.